களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம் -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிழக்கிலங்கையின் தானாக தோன்றிய ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.

சுயம்பாக உருவாகிய சித்தர்களினால் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.

பண்டைய முறைக்கு அமைவாக அலங்கார உற்சவமாக நடைபெற்றுவரும் ஆலயத்தின் வருடாந்த உற்சவமான 10 தினங்கள் விமர்சையாக நடைபெற்றது.

நேற்று சுயம்புலிங்கப்பிள்ளையாரின் மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.பண்டைய முறையின்படி இந்த நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வந்ததை தொடர்ந்து சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ காவடிகள் ஆடிவர விநாயப்பெருமானுக்கு சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய தீர்த்தோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.