மட்டக்களப்பில் முடிவுக்கு வந்தது உண்ணாவிரத போராட்டம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரத,சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டங்கள் நிறைவுக்குவந்தன.

ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து இந்த போராட்டங்கள் இன்று மாலை முடிவுக்கு வந்தன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர் அமைப்பினால் மூன்றாவது தினமாகவும் இன்றும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்ட நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் மாணவர் அணியின் தலைவர் மோகன் டிலக்ஸன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று மாலை தொடக்கம் ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து தமது சாகும் வரையிலான உண்ணாவிரத  போராட்டத்தினை முடித்துக்கொள்வதாக டிலக்ஸன் அறிவித்தார்.

ஆங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்,தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் ஆகியோர் நீர் வழங்கி போராட்டத்தினை நிறைவுசெய்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர் அமைப்பினால் மூன்றாவது தினமாகவும் இன்றும் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டுவந்த உண்ணாவிரத போராட்டம் இன்று மாலை கைவிடப்பட்டது.

தேகியத்தன்கண்டி விகாரையில் இருந்துவருகைதந்த பிக்குகளினால் அனுஸாசனம் ஓதப்பட்டு வியாழேந்திரன் எம்பிக்கு நீர் வழங்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்றைய போராட்டத்தில் பெருமளவான புத்த பிக்குகள் கலந்துகொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.