பௌத்த தேரரின் உறுதிமொழினால் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் நிறைவு –தொடர்ந்து போராடும் ராஜன்

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுமென ஞானசார தேரர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து நால்வர் தமது போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜன் நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை ஏனையவர்களும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்திய மதுகுருமார்கள் அறிவித்துள்ளனர்.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) 6ஆவது நாளாகவும் தொடர்ந்த நிலையில் இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு  அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தமது ஆதரவை வெளியிட்டுவந்தனர்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் போராட்டக்களத்திற்குச்வந்து ஆதரவு வழங்கியிருந்தனர்.
இன்று போராட்டம் நடைபெறும் இடத்திற்குவந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட மகாசங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது குறுகிய காலத்திற்குள் கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கை தான் எடுப்பதாகவும் அவ்வாறு முடியாமல்போனால் இந்த போராட்டத்தினை தனது தலைமையில் முன்னெடுப்பதாகவும் இதன்போது ஞாசார தேரரினால் உறுதியளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம் உட்பட நான்கு பேர் தமது போராட்டத்தினை நீர் அருந்து முடிவுக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரையில் தமது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

இதேநேரம் தாங்கள் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை முடித்துள்ள போதிலும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்த நான்கு பேரும் அறிவித்துள்ளனர்.