கல்முனை தமிழ் பிரதேச விவகாரம் - இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.

கல்முனையில் மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு இணைவாக மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

1989ஆம் ஆண்டு கல்முனை தமிழ் பகுதி உப பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இதுவரையில் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பு காந்திபூங்க முன்பாக மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனா.

ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் உரிமையினை பறிக்கும் வகையில் கல்முனையில் செயற்படுவதாகவும் கல்முனை பிரதேச செயலகம் உடனடியாக தரமுயர்த்தப்படவேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.