ஒல்லிக்குளம் பகுதியில் இரண்டாவது நாளாகவும் தேடுதல் -சீன தயாரிப்பு வாள்கள் பெருமளவில் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து இரண்டாவது நாளாகவும் பெருமளவு வாள்கள் கத்திகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேசிய தௌபீக் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் சகாவான சவூதியில் கைதுசெய்யப்பட்ட மில்ஹான் என்பவர் வழங்கி தகவலின் அடிப்படையில் ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து நேற்று பெருமளவான வெடி பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

கொழும்பில் இருந்து மில்ஹான் மற்றும் சஹ்ரானின் சாரதியான கபூர் எனப்படும் மொஹமட் சரீப் ஆதம்லெப்பை ஆகியோர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டு இந்த வெடிபொருட்கள் ஒல்லிக்குளத்தில் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது 300 ஜெலிக்நைட் குச்சிகள்,1000 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று இன்று காலையும் குறித்த சந்தேக நபர்கள் கொண்டுவரப்பட்டு தேடுதல் மேற்கொள்ள நிலையில் சீன தயாரிப்பு வாள்கள் 49 மற்றும் நாட்டு வாள்கள் 05உம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட அதிரடிப்படையின் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள.

கடந்த மாதம் ஒல்லிக்குளத்தில் சஹ்ரான் பயன்படுத்திய பிரதான முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த வெடிபொருட்களும் அப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய தௌபீக் ஜமாத்தின் ஆயுதப்பிரிவுக்கான தலைவராக மில்ஹான் செயற்பட்டுள்ளதுடன் வவுணதீவு பொலிஸார் இருவரின் கொலையும் இவரின் தலைமையில் நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.