மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக பூர்த்தி தின மணவாளக்கோல நவோத்திர சகஸ்கிர 1008 சங்காபிஷேக பெருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக பூர்த்தி தின மணவாளக்கோல நவோத்திர சகஸ்கிர 1008 சங்காபிஷேக பெருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

தீர்த்தம், தலம், விருட்சம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்டு இலங்கையின் வரலாற்றில் தனி இடத்தைக்கொண்ட அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயமானது இராம பிரான் வழிபட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டதுடன் அந்த கும்பாபிஷேகத்தின் ஆண்டினைபூர்த்திசெய்யும் வகையில் வருடாந்தம் இந்த விசேட மணவாளக்கோல சகஸ்ர சங்காபிசேகம் நடாத்தப்பட்டுவருகின்றன. ஆலய முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட மண்டபத்தில் 1008 சங்குகள் கொண்டு விசேட பூசைகள் செய்யப்பட்டது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில்  விசேட மஹா கணபதி ஹோமம் நடத்தப்பட்டதுடன் கும்பங்களுக்கான விசேட பூசைகளும் நடத்தப்பட்டன.

இதன்போது ஆலயத்தின் பரிபால மூர்த்திகளுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் சங்குகளுக்கும் விசேட பூசைகள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பூசைகள் நடத்தப்பட்ட விசேட கும்பம் அடியார்கள் புடை சூழ ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன் சங்குகள் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டது.

கும்ப அபிஷேகத்தினை தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் பிரசாதங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.