இனவாத ஊடகங்களை புறக்கணியுங்கள் -காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம் கோரிக்கை

ஆழ்ந்த கவலையுடன் முஸ்லிம் சமூகம் இருக்கும் சந்தர்ப்பத்தில் சில இனவாத ஊடகங்கள் ஊடக தர்மத்தையும் மீறி முஸ்லிம் சமூகம் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு தலைப்பட்சமான பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி இனவாத வன்முறைகளை தூண்டி அரசியல் இலாபங்களுக்காக குளிர்காய முயற்சி செய்து கொண்டிருக்கும் சில இனவாத ஊடகங்களை சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் நாம் வன்மையாக கண்டிப்பதுடன், காத்தான்குடி பொதுமக்கள் இவ்வாறான இன வாத ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காத்தான்குடியில் உள்ள அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் தாய் நிறுவனமான காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் 2019.05.19ஆம் திகதிய நிருவாக சபை கூட்டத்தீர்மானத்திற்கு அமைவாக,கடந்த ஏப்ரல் 21 திகதி முழு இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இக் கொடூர சம்பவத்தில் உயிர்நீத்த, காயமடைந்த சகோதரர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெறிவித்துக்கொள்வதோடு சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே எமது கண்டனம் மற்றும் அனுதாபங்களை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியும் இருந்தோம்.
ஏப்ரல் 21இல் இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னர் அரசு பாதுகாப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் தருணத்தில் நாட்டில் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள் மற்றும் பாரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திய இனவாத குழுக்களுக்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, மேற்படி இரு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டு ஆழ்ந்த கவலையுடன் முஸ்லிம் சமூகம் இருக்கும் சந்தர்ப்பத்தில் சில இனவாத, ஊடக தர்மத்தையும் மீறி முஸ்லிம் சமூகம் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு தலைப்பட்சமான பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி இனவாத வன்முறைகளை தூண்டி அரசியல் இலாபங்களுக்காக குளிர்காய முயற்சி செய்து கொண்டிருக்கும் சில இனவாத ஊடகங்களை சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் நாம் வன்மையாக கண்டிப்பதுடன், காத்தான்குடி பொதுமக்கள் இவ்வாறான இன வாத ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

அதே சமயத்தில் ஊடக தர்மத்தை பேணி சமூக, சமய நல்லிணக்கங்களை மேம்படுத்தும் நோக்கிலும் செயற்பட்ட நடு நிலையான ஊடகங்களை இச்சந்தர்ப்பத்தில் மனமாற பாராட்டுகிறோம்.

அத்துடன் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத செயற்பாட்டுகளை மேற்கொள்ளும் இவ் இனவாத ஊடகங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்வுகளை பார்வை இடாது, இவ் ஊடகங்களுக்கு அனுசரணை மற்றும் விளம்பரங்கள் வழங்கக்கூடாது எனவும், இவ் ஊடகங்களினால் நெறிப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளாது புறக்கணிக்க வேண்டும் எனவும் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் காத்தான்குடி பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.