சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 15வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இன்று பகல் அனுஸ்டிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும் கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 15வது நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளபோதிலும் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று பலக் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுவரும் உயிர்நீர்த்த ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியருகே படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு தின நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த காலத்தில் தமிழ் ஊடகத்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க இந்த ஆட்சியிலும் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதுடன் சர்வதேச பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டது.