மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள்

மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டு இருப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அங்கு படையினரினால் தீவிர தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்காரணமாக மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் பின்னர் நகரம் வழமைக்கு திரும்பியது.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் அரசடியில் உள்ள தனியார் வங்கியொன்றிலேயெ இன்று காலை பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்று குண்டுசெயலிழக்கச்செய்யும் படையினர் மற்றும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த தனியார் வங்கியின் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கல்முனை-மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்து அரசடி சந்திவரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் காரணமாக மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் ஏனைய வங்கிகளும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது.

எனினும் குறித்த பகுதியில் எந்தவிதமான வெடிபொருட்களும் மீட்கப்படாத நிலையில் நகரின் நிலைமை வழமைக்கு திரும்பியது.