ஈவிரக்கமற்ற கொடூர அரக்கன் மேற்கொண்ட தாக்குதல்வேளையில் மெய்சிலிர்க்கும் மனித நேய செயல்





கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை இறை ஆராதனை வேளையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் நிறைந்திருந்த சீயோன்  தேவாலயத்தில்   ஈவிரக்கமற்ற கொடுர அரக்கன் மேற்கொண்ட தாக்குதலால் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என முப்பது உயிர்கள் பலிகொள்ளப்பட்டு, பலர் படுகாயமடைந்தனர்.

நாட்டில் பலபாகங்களில் எட்டு இடங்களில் தொடராக  ஒருசில மணிநேரங்களில் இடம்பெற்ற வெடிப்புசம்பவங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள அதேவேளை 800கும் அதிகளவானோர் காயமடைந்துமுள்ளனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் வெடிப்புசம்பவம் இடம்பெற்றதும் நகரை அண்டிய இளைஞர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன்,  மட்டக்களப்பு வைத்தியசாலைக்கும் அதிகளவில் பொதுமக்கள் திரண்டனர்.

 காயப்பட்டவர்களுக்கு குருதி தேவையென மருத்துவர்கள் கோரிகை விடுத்ததும் சமூகவலைத்தளங்களிலும், ஆலய ஒலிபெருக்கிகளிலும் நேரடியாக தமது தெரிந்தவர் நண்பர்கள் என பலருக்கு
அறிவீத்தல்களை விடுத்து,   மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு போதுமான அளவு குருதி பெற்றுக்கொடுத்தனர் .

 ஒரு கட்டத்தில் குருதி தேவையில்லை வந்தவர்கள் பெயரையும் தொடர்பிலக்கங்களையும்கொடுத்து விட்டு சொல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்தளவிற்கு பொது மக்கள் , இளைஞர்கள் ஒற்றுமையாக சகோதர உணர்வுடன் தமது உறவுகளின் உயிர்காக்க துடித்தனர். இது எம் மக்களின் உயர்ந்த மனோநிலையை பறைசாற்றி நின்றது. 

அதுமாத்திரமின்றி வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதார உதவியாளர்கள்,  பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் தாகசாந்திக்காக குளிர்பானம் மற்றும் குடிநீர் வசதிகளையும் தாராளமாக ஏற்படுத்திக்கொடுத்தனர்.

சமூக மட்ட அமைப்புக்கள் பலவும், அரசியல் கட்சிகளும் வேறுபாடு எதுவுமின்றி மக்களுக்கான உதவிகளை தேவைக்கேற்ப வழங்கினர்.

இந்த வெடிப்புசம்பவத்தில் மட்டக்களப்பு மாநகரசபையினதும், அதன் தீயனைப்பு குழுவினரதும்  பணிகளும் சிறப்பாக குறிப்பிடத்தக்கது தீயனைப்பு வாகனம் விரைவாக குறித்த இடத்திற்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை.

இரண்டாம் நாளான திங்கட்கிழமை வைத்தியசாலையிலிருந்து சடலங்களை உறவினர்கள் பொறுப்பேற்பதற்கான உதவிகளிலிருந்து இறுதிக்கிரிகைளில் பங்கேற்பது, பாதிக்கப்பட்டவர்களின், உயிரிழந்த உறவுகளுக்கு உணவு வசதிகளை பெற்றுகொடுத்தலிருந்து பல சொயற்பாடுகளை பல இளைஞர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டமையை காண முடிந்தது.

  தமது உறவுகளின் இழப்புக்களுக்கு சோகத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்த கறுப்பு வெள்ளை கொடிகளை தொங்கவிட்டு வாழைமரங்கள்கட்டுதல் போன்ற செயற்பாடுகளில் பல இளைஞர்கள் ஒற்றுமையாக குழுவாக செயற்பட்டமை பலரையும் வியக்க வைத்தது.

ஈவிரக்க மற்ற கொடூர மனம் கொண்டவர்களின் படு பாதகச்செயலுக்கு மத்தியில் பொறுமையாக, மனிதநேயத்தோடு வெளிப்பட்ட  இளைஞர்களின் இத்தகைய மனிதநேயச்செயற்பாடுகள் எம்மிடையே இன்னும் மனிதநேயம், சகோதரத்துவம்  மரணிக்கவில்லை என்பதை உறைக்கும் வகையில் உரத்துச்சொல்கிறது.

இன்னும் மக்களிடையே ஆட்கொண்ட அச்சம் நீங்கவில்லை, நிலமை ஒரிரு நாட்களில் சீரடைந்தாலும் மக்களின் மனங்களின் ஏற்பட்ட காயம் மாறாத வடுவாகவே இருக்கப்போகிறது.