மட்டக்களப்பில் நிலமைகள் தொடர்பில் ஆளுனர் தலைமையில் ஆராய்வு

ஏதிர்வரும் 24ம் திகதி முழு வடகிழக்கிலும் துக்கதினமாக அனுஸ்டிக்குமாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருக்குமான அவசர சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் மட்டக்களப்பு விடுதியில் இன்று மாலை இடம் பெற்றது.

நேற்று இடம்பெற்ற சம்பவத்தினால் இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டுவிடாமல் எவ்வாறு பொதுமக்களை நடாத்துவதற்கான வழிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையினை வளர்ப்பதற்கு துரித செயற்பாடுகளை முன்னடுப்பது தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துறைராஜ சிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதன்போது ஏதிர்வரும் 24ம் திகதி முழு வடகிழக்கிலும் துக்கதினமாக அனுஸ்டிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

 இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் கருத்து வெளியிடப்பட்டது.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் மரியாதைக்குரிய பொன்னையா ஜோசப்புக்குமிடையிலான அவசர சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பில் உள்ள ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் அசாதாரன நிலையினை கருத்தில் கொண்டு இனங்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் அமைதியான நிலமையினை ஏற்படுத்தும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தையடுத்து ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தனது ஆழ்ந்த கவலையினை மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் மரியாதைக்குரிய பொன்னையா ஜோசப்பிடம் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் நிகழ்வுகளை திட்டமிடப்பட்டபடி நடாத்துமாறும் வேண்டிதுடன் அதற்கான முழு பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினரை வழங்குமாறும் பாதுகாப்பு படையின் தளபதி மற்றும் படையினருக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தரவு பிறப்பித்தார்.

இதில் கிழக்கு மாகாண எஸ்.எப்.படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அருன ஜெயசேகர உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.