மட்டக்களப்பு சவுக்கடியில் நீதவான் முன்னிலையில் மேலும் பல மனித எச்சங்கள் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சத்துரக்கொண்டான், சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கடந்த  புதன்கிழமை (06)  கிணறு புனரமைப்பதற்காக  குழி தோண்டும் போது அந்த குழியிலிருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சத்துரக்கொண்டான் சவுக்கடி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டுவரும் வீட்டு திட்டத்திலுள்ள ஒருவர் தனது காணியில் சிறிய கடை ஒன்றை நடத்திவரும் நிலையில் கிணறு ஒன்றை அகழும்  நடவடிக்கையில் மோற்கொண்டு வந்தபோதே இவ்வாறாக மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (07) திகதி மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் விசாரனைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து நீதிவானின் உத்தரவிற்கு அமைவாக குறித்த இடம் மேலும் அகழப்பட்ட போது மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வும் அத்துடன் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது குழியிலிருந்து மனித மண்டை ஓட்டின் பகுதிகளும், எலும்புகளும் மீட்கப்பட்டதுடன் தடையவியல் பிரிவு பொலிஸார் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் அவர்களது தலைமையில் விசாரனைகள் இடம்பெற்றதுடன், நீதிபதியின் உத்தரவிற்கமைய  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சத்துர நந்தசிறி எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்காக கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.