காத்தான்குடியில் ஹெரோயின் விற்பனை கும்பல் சிக்கியது

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஹெரோயின் விற்பனை மேற்கொள்ளப்பட்டுவந்த வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விசேட போதையொழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி 10ஆம் குறிச்சியில் உள்ள வீடு ஒன்றில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் நான்கு பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட போதையொழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சுமார் மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்களும்போதைப்பொருளும் சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.