மட்டக்களப்பில் ரணவிரு வீடுகள் எதிர்வரும் 10ஆம் திகதி கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு குடும்பங்களுக்கு அமைக்கப்பட்ட 39வீடுகள் எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக ரணவிரு சேவா அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.

ரணவிரு சேவா சங்கத்தின் ஊடாக வீடுகள் வழங்கப்படவுள்ளவர்களுக்கான கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ரணவிரு சேவா அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப், ரணவிரு சேவா அதிகாரசபையின் உறுப்பினர்கள், ரணவிரு பயனாளிக் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘ரணவிரு சேவா’ பயனாளிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 39 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

இந்த திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு வழங்கவுள்ளனர்.

அன்றைய தினம் 500 ரணவிரு குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக ரணவிரு சேவா அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.