கல்லடி பாலத்தில் அமைச்சருக்காக நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் -புறக்கணித்துச்சென்ற அமைச்சர்

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவினை வரவேற்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்துகொள்ளாமல்சென்றதை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச இன்று காலை மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுமுலையில் வீடமைப்பு திட்டத்தினை திறந்துவைப்பதற்காக அமைச்சர் இன்று வருகைதந்தார்.

மீண்டும் வீடமைப்பு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மட்டக்களப்புக்கு வருகைதரும் அமைச்சரை வரவேற்கும் வகையில் கல்லடி பாலத்திற்கு அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

காலை 7.00மணி முதல் பெருமளவான பொதுமக்கள் கல்லடி பாலத்தில் வரவேற்பதற்காக குழுமியிருந்தனர்.சுமார் 9.30மணியளவில் கல்லடி பாலத்தினை கடந்து அமைச்சரின் வாகனங்கள் சென்ற நிலையில் குறித்த நிகழ்வில் அமைச்சர் பங்கேற்கவில்லை.

கல்லடி பாலத்தடியில் அமைச்சருக்கு வரவேற்பளித்து அங்குள்ள ஒளவையார் சிலைக்கு மாலையணிவிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல்சென்றமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லடி பாலத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கடும் வெயிலுக்கும் மத்தியில் அமைச்சரை வரவேற்பதற்காக நின்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றதை காணமுடிந்தது.