நீதியை அணுகல் மற்றும் பெண்கள் வலுவூட்டல் பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்

நீதியை அணுகல் மற்றும் பெண்கள் வலுவுட்டல் பயிற்சிகளைப்பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் வகையிலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையினை எதிர்கொள்வதற்கான அடிப்படையினை வழங்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை சமர்ப்பிக்கும் வகையிலான நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.எல்.எம்.புகாரி முகமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் கலாநிதி சரத் அபேயவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் என்.மதிவண்ணன்,கிழக்கு மாகாண சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி எஸ்.சரணியா மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல்,பால்நிலை அடிப்படையிலான வன்முறையும் பாதிக்கப்பட்ட பெண் உதவி நாடிக்கான சேவையை பெற்றுக்கொள்வதில் நிலவுகின்ற இடைவெளிகள் மற்றும் சவால்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெண்களின் உரிமையை மேம்படுத்துகின்ற நோக்கி மேற்கொள்ளப்பட்ட திட்டத்தினுடைய பெறுபேறுகளும் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அரச மற்றும் சமூகமட்ட பெண் தலைவர்களுக்கான கொள்ளவு விருத்தி பயிற்சிகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதன்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கு உள்ள இடைவெளிகளை இல்லாம்செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.