வவுணதீவுக்கு நேரடியாக சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்.

இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் மட்டக்களப்புக்கு வருகைதந்த பொலிஸ்மா அதிபர் வவுணதீவு பகுதிக்கு நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுபகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வர்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து இன்று பாராளுமன்றத்திலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ்மா நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து விளக்கமளித்தார்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலங்களையும் பார்வையிட்டார்.

இந்த விசாரணையின்போது பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதுடன் அதனை தொடர்ந்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் பொலிஸ் மா அதிபர் நடாத்தினார்.