முனைப்பு நிறுவனத்தினால் நவம்பர் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வாழ்வாதார வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முனைப்பின் தலைவர் மா.சசிகுமார் தெரிவித்தார்.
சுவிஸ் லுட்சேர்ன் அருள்நிறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் தாயக மக்களுக்கான இரங்கும் உள்ளங்கள் நலன் காக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவியின் ஊடாக மட்டக்களப்பு தாழங்குடாவைச்சேர்ந்த குடும்பத்துக்கு தலைமை தாங்கும் குடும்பத்தலைவியின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் மெசின் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன்,தொழிலினை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக நிகழ்வில் கலந்துகொண்ட முனைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மாணிக்கப்போடி குமாரசாமி தெரிவித்தார்.
அத்தோடு மகிழடித்தீவு கிராமத்திலும் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்னொருவுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடுகளும், மகிழவெட்டுவான் கிராமத்தில் இன்னுமொரு குடும்பத்துக்கு தலைமைதாங்கும் குடும்பத்தலைவிக்கு சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கொடுவாமடு தரிவனம் பாலர் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்குமுகமாக நீர்தாங்கியொன்றும், அதனை நிலையாக நிறுத்தி வைப்பதற்கான இருக்கைக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
நிகழ்வுகளில் முனைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மா.குமாரசாமி ,இலங்கைக்கிளையின் தலைவர் மா.சசிகுமார், செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி,சுவிஸ்கிளையின் உறுப்பினர் த.கோகிலன் உட்பட பல சமுகசேவகர்களும் கலந்து கொண்டனர்.