மண்முனைப்பற்று பிரதேச கலாசார விழா - உலகநாச்சியார் நாட்டுக்கூத்து வரவேற்புடன் நடைபெற்றது

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மண்முனைப்பற்று பிரதேச செயலகம்,பிரதேச கலாசார பேரவை இணைந்து நடாத்திய 2018ஆம் ஆண்டுக்கான கலாசார விழா இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு,ஆரையம்பதியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்-முஸ்லிம் மக்களின் கலைகலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையிலும் இன ஐக்கியத்தினை பேணும் வகையிலும் இந்த கலாசார விழா ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த கலாசார விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன்,ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அல்மேடா, மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.நல்லதம்பி,மூத்த கலைஞர் மு.கணபதிப்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்பு நடனமாக உலகநாச்சியார் நாட்டுக்கூத்து ஆடப்பட்டு வரவேற்கப்பட்டமை அனைவரையும் வெகுவாக கவனர்ந்தன.

இதன்போது மண்முனைப்பற்றின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் சிகரம் என்னும் நூலும் வெளியிடப்பட்டதுடன் மண்முனைப்பற்று பிரதேசத்தில் கலைத்துறை மற்றும் வைத்திய துறைக்கு பங்களிப்பு செய்த ஐந்து கலைஞர்கள்,நாட்டு வைத்தியர் இரு இனங்களினை சேர்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கலாசார விழாவினையொட்டி கலைக்கழகங்கள்,மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின்போது இரு இன கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மண்முனைப்பற்று வயோதிபர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயமும் உரையாற்றினார்.