தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டமைப்பு சோரம் போகாத காரணத்தினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது-முன்னாள் எம்.பி. சிறிநேசன்

இறுதிக்கட்டத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள நான்கு பேரை தங்களது பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இழுக்கமுடியாத காரணத்தினால் பாராளுமன்றம் குறை மாதத்தில் கலைக்கப்பட்டது என மட்;டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை  பாராட்டும் விழா நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில்  நடைபெற்றது.

மட்டக்களப்பு பிரமி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா பிரமி கல்வி நிலையத்தின் இயக்குனரும் ,ஆசிரியருமான மோகன்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயக  மண்டபத்தில் நடைபெற்றது .

2018 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழாவில் பிரதம விருந்தினராக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ,சிறப்பு அதிதியாக மாநகர பிரதி முதல்வர் கே.சத்தியசீலன் ,மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் மற்றும் பிரதி கல்விப்பணிப்பாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ,விருதுகளும் வழங்கி வைத்தனர் .


இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

ஐந்து ஆண்டுகள் 60மாதங்கள் இருக்கவேண்டிய பாராளுமன்றம் 38மாதங்களில் குறைப்பிரசவம் என்னும் அடிப்படையில் கலைக்கப்பட்டுவிட்டது.நிறை பிரசவம் நடக்கவில்லை,குறைப்பிரசவம் நடாத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு முக்கியகாரணம் சுயநல அரசியல்,சுயபயம்,அதிகார மோகமே காரணமாகும்.
இந்த பாராளுமன்ற அரசியல் யாப்பு கலைக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புதிதாக வரையப்பட்டுள்ள அரசியல் யாப்பும் காணப்படுகின்றது.நீண்டகாலமாக வழிநடத்தல் குழுவின் வழிநடத்தலின் கீழ் வரையப்பட்ட அரசியல் யாப்பு சிறுபான்மை மக்களுக்கான ஒரு தீர்வாக நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்தது.அந்த அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்த விடக்கூடாது சிறுபான்மை சமூகத்திற்கு எந்த தீர்வினைம் கொடுக்ககூடாது என்கின்ற பேரினவாத அடிப்படைவாத வக்கிரபுத்தியும் ஒரு காரணமாகும்.

இரண்டாவதாக விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன.பாரிய குற்றங்கள் செய்தவர்கள்,பாரிய மோசடிகள் செய்தவர்கள்,கொலைகள் செய்தவர்களை விசாரணைசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்டது.இந்த விசேட நீதிமன்றம் தனது விசாரணையை நடாத்தியதுடன் சிலர் சிறைக்கு செல்லவேண்டிய நிலையேற்பட்டது.அதனை தடுப்பதாக இருந்தால் இந்த விசேட நீதிமன்றங்களை இல்லாமல் செய்யவேண்டும்.இந்த விசேட நீதிமன்றத்தை இல்லாமல்செய்யவேண்டுமானால் அதனைக்கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை இல்லாமல்செய்யவேண்டும்,தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற தற்காப்பு நடவடிக்கையாக விசேட நீதிமன்றங்களை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி கவிழ்ப்பு நடாத்தப்பட்டுள்ளது.

இந்த விசேட நீதிமன்றத்தினால் விசாரணைசெய்யப்பட்டவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.இதில் பிரபலமான புள்ளிகளே விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.இன்று கதாநாயகர்களாக சுற்றிக்கொண்டிருக்கும் சிலர் சிறைக்குள் இருக்கவேண்டிய நிலை வரும் என்ற காரணத்தினையும் கொண்டு இந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

அரசியல் யாப்பினை தடுக்கவேண்டும்,இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படக்கூடாது,சில கௌரவ பிரஜைகள் என சுற்றித்திரிகின்றவர்கள் விசேட நீதிமன்றம் ஊடாக சிறைக்குள் தள்ளக்கூடாது என்பதற்காக இந்த பாராளுமன்றத்தினை மிக அவசரமாக கலைத்தார்கள்.

அரசியல் சந்தைகளில் விலைகள் பேசப்பட்டன.எங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தவர்களில் ஒருவரை தவிர வேறு யாரும் விலைபோகவில்லை.என்னிடமும் வந்தார்கள்,அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு தருவதாகவும் வரப்பிரசாதங்களை தருவதாகவும் கூறினார்கள் எங்களுக்கு ஒரு கட்சி இருக்கின்றது,தலைமை இருக்கின்றது அவர்கள் எடுக்கும் முடிவினை மீறி கோடிகோடியாக தந்தாலும் வரமாட்டோம் என்று கூறிவிட்டோம்.நாங்களும் அங்கு சில்லரையாக பணத்தினைப்பெற்றுக்கொண்டு அங்கு சென்றிருந்தால் சிலவேளைகளில் பாராளுமன்றம் கலைக்கப்படாத நிலையிருந்திருக்கும்.நாங்களும் போலி அமைச்சர்களாக வலம்வந்திருப்போம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஐந்து ஆறு பேரையாவது கழட்டிப்பார்க்கலாம் என முயற்சிகளை மேற்கொண்டனர்.ஒருவர் மட்டுமே கழன்றார்,வேறு யாரும் கழட்டுப்படவில்லை.பல தடவைகள் என்னிடம் தொடர்புகளை ஏற்படுத்தினர்.நாங்கள் அதனை நிராகரித்தோம்.

இறுதிக்கட்டத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள நான்கு பேரை தங்களது பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இழுக்கமுடியாத காரணத்தினால் பாராளுமன்றம் குறை மாதத்தில் கலைக்கப்பட்டன.எது நடந்தது அது நன்றாகவே நடந்தது,எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது,எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.சிலரின் முகம்களை இந்த அரசியல்மாற்றம் எங்களுக்கு காட்டித்தந்துள்ளது.

இனியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் அமைச்சுக்காகவே பணத்திற்காகவோ விலைபோகமாட்டார்கள்.இந்த அரசியலுக்கு நாங்கள் எப்போதும் அடிபணியப்போவதில்லை.