மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக்கூட்டம் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,திணைக்களங்களின் தலைவர்கள்,கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் அசீஸ்,முப்படைகளின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆறு தினங்களில் 1352 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 16632 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்கள் 14 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 853 குடும்பங்களை சேர்ந்த 2708 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில வெள்ள அனர்த்தம் காரணமாக வாகரை,கிரான்,ஏறாவூர்ப்பற்று,வெல்லாவெளி,பட்டிப்பளை,வவுணதீவு பிரதேச செயலகங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகம்,அவர்களுக்கான ஏனைய தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் ஆளுனர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் சில இடங்களில் பாலங்கள் வெள்ளம் காரணமாக உடைந்து சேதமடைந்துள்ளதன் காரணமாக அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மக்களுக்கான உதவிகளையும் வழங்கவேண்டும் எனவும் அதற்காக அனைத்து தரப்பினரும் உதவவேண்டும் எனவும் ஆளுனர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணசபை ஊடாக பிரதேசசபைகளுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவியை வழங்குவதாகவும் ஆளுனர் தெரிவித்தார்.