(சசி துறையூர்)
கல்வி கற்ற பாடசாலையின் சகல துறைகள் ரீதியான முன்னேற்றத்திலும் பழையமாணவர்களின் பங்களிப்பும் அக்கறையும் அதிகமாக இருக்கவேண்டும். நாம் கல்வி கற்றோம் பாடசாலையை விட்டு வெளியேறினோம் நமது கடமை முடிந்து என இருந்து விடமுடியாது என துறைநீலாவணை மகாவித்தியாலய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிபிரதேச செயலாளருமான
ந. நவநீதராஜா கருத்து தெரிவித்தார்.
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியில் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் துறைநீலாவணை பழையமாணவர் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது அது முதல் இன்று வரை பாடசாலையின் முன்னேற்றத்திற்க்காக சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
நாம் கல்வி கற்ற பாடசாலை இது வெறுமனே கல்வி கற்றோம் வெளியேறினோம் என்று இருந்துவிட முடியாது நமக்கு பின்னால் நமது சகோதரங்கள், அதன் பின் பிள்ளைகள் என நமது உறவுகளேதான் இந்த பாடாசாலையில் கல்வி கற்றலை தொடரப்போகிறார்கள். அதற்க்காக இந்த பாடசாலையின் கட்டுமானம், மாணவர் வரவு, ஒழுக்கம், கற்றல் கற்பித்தல் என சகல துறைகள் மீதும் எமது கவனமும் ஒத்துழைப்பும் பாடசாலை நிருவாகத்தோடு இணைந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அதற்க்காகத்தான் பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கம் என ஒன்று நிறுவப்படுவது. அந்த வகையில் எமது சங்கமும் சிறப்பான ஆரம்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறது, எமக்கு சிறந்த நிருவாகிகள் கிடைத்திருக்கிறார்கள் அதே போன்று இன்னும் இந்த பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்கள் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அதுபோல புலம்பெயர் தேசங்களில் உள்ளோரும் தமது ஒத்துழைப்பை நல்கவேண்டும்.
அந்த வகையில் பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவிய
இந்த பாடசாலையில் கல்விகற்று தற்போது அவுஸ்ரேலியா நாட்டில் வசிக்கும் திருவாளர் நாகேந்திரன் மேகநாதன், நியுஸ்லாந்தில் வசிக்கும்
செ.தர்மலிங்கம் மற்றும் கணகரெத்தினம் சகோதரர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம், என குறிப்பிட்டார்.