கணவனை தாக்கி கொலைசெய்த சகோதரர்களுக்கு மரண தண்டனை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் விதியாக்கியது

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று சகோதரர்கள் இருவருக்கு சாகும் வரையில் தூக்கிலிடுமாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சகோதரியின் கணவரை படுகொலைசெய்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடைபெற்றுவந்த விசாரணையின் கீழ் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடீன் இந்த மரண தண்டனையினை விதித்தார்.

2005ஆம் ஆண்டு 10 மாதம் 09ஆம் திகதி களுவாஞ்சிகுடியில் வீட்டில் மயில்வாகனம் வடிவேல் என்பவர் கடுமையானமுறையில் தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர்களான தெய்வநாயகம் மகேஸ்வரன்,தெய்வநாயகம் மேகராசா ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலும் இருவரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இருவரையும் சாகும் வரையில் தூக்கிலிட்டு மரணதண்டனையை நிறைவேற்றுமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடீன் தீர்ப்பளித்தார்.