சவூதியில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் -43 நாட்கள் கடந்தும் சடலத்தினை கொண்டுவரமுடியாத அவல நிலை

சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்று உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவர உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படைச்சேனையை சேர்ந்த 28வயதுடைய இளம் குடும்பஸ்தரான கணபதிப்பிள்ளை கோமலன் என்பவர் சவூதியில் மாரடைப்பு காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் சவூதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது கணவர் உயிரிழந்து 43 நாட்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் அவரது சடலத்தினை கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லையென உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.இது தொடர்பில் வவுணதீவு பிரதேச செயலகம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் உட்பட பல்வேறு இடங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் யாரும் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் 23ஆ; திகதி அனைத்து பகுதிக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.மிகவும் வறிய நிலையில் தமது குடும்ப நிலையினை கருத்தில்கொண்டு வெளிநாடு சென்ற குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள நிலையில் 43 நாட்களாக குறித்த குடும்பத்தினர் கவலையுடனேயே இருந்துவருவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் கவனத்திற்கும் கொண்சென்ற போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும்
முன்னெடுக்கப்படவில்லையெனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலுக்காக சென்ற தமது பிள்ளை சடலமாக்கப்பட்ட நிலையில் இதுவரையில் தமது பிள்ளையின் சடலத்தைக்கூட கொண்டுவர நடவடிக்கையெடுக்காமை தொடர்பில் உயிரிழந்தவரின் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.