மட்டக்களப்பு தமிழர்களின் வரலாற்றினை கூறும் ஆலயம் -இயற்கையின் அழகால் கட்டிபோடும் அதிசயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழமையான வரலாற்றினைக்கொண்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரடியனாறு குசனார் குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் பாதயாத்திரை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றின் பொக்கிசமாக இந்த குசனார் மலை கருதப்படுகின்றது.அங்கு காணப்படும் எச்சங்கள் 2000வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் எச்சங்களென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தனை சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மலையின் மீது இயற்கை அழகுடன் தமிழர்களின் பாரம்பரியத்தினையும் சுமந்ததாக காணப்படும் குசனார் குமரன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்தில் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

ஆலய பரிபாலனசபையினர் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் இணைந்து இந்த சிரமதான பணியை முன்னெடுத்தனர்.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.குறித்த ஆலயத்தின் மகிமையினையும் அதன் வரலாற்று சிறப்பினையும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கல்லடி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினரால் கடந்த ஏழு வருடமாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுவதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.

எதிர்வரும் நான்காம் திகதி அதிகாலை 03.00மணியளவில் கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து இந்த பாதயாத்திரை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

செங்கலடி பிரதேசம் ஊடாக இந்த பாதயாத்திரை செல்லவுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பழமையினையும் பாரம்பரியத்தினையும் நேசிக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.