மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்ட பிள்ளையான் -இறுதிக்கட்டத்தினை நெருங்கும் விசாரணைகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்ற நிலையில் இறுதியாக வாய்மூல சமர்ப்பணங்களுக்கான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

இறுதிக்கட்ட சாட்சியங்களாக இன்று மேல் நீதிமன்ற பதிவாளர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விளக்கமறியலில் உள்ள இரண்டாம் சந்தேக நபரான பிரதி பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா அனுப்பிய கடிதம் தொடர்பில் இன்றைய விசாரணைகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கின் அடிப்படையிலான சாட்சியங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி வாய்மூல சமர்ப்பணங்களுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.