கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது

இலங்கையில் தான்தோன்றி ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்காட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நந்தி புல்லுண்டு சாணம் இட்டு வெள்ளையனை பின்காலால் உதைத்து ஓடவைத்த ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது.

கொக்கட்டி மரத்தில் லிங்கமாக இருந்து தானாக தோன்றியத்தன் காரணமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் என்ற பெருமையினை கொண்ட ஆலயமாக உள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு ஹோற்சவ கிரியைகள் ஆரம்பமாகியது.இன்று அதிகாலை யாகபூஜை,மூலமூர்த்தி அபிசேகம் மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்று கொடி ஊர்வலமாக கொடித்தம்பத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று நெற்கதிர்கள் இணைந்த கொடிச்சீலையுடன் வேதபராயணங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீமு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றதுடன் ஆலயத்தின் மஹோற்சவமும் நடைபெறவுள்ளது.

தினமும் சந்தியாவாகனமும் நடைபெற்று நாளை பிற்பகல் யாகபூஜை, தம்பபூஜை, வசந்தமண்டபபூஜை, சுவாமி வீதியுலான என்பன நடைபெறவுள்ளது.

பதினெட்டு தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவேட்டை மற்றும் தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

கிழக்கிலங்கையில் தேரோடும் ஆலயம் என்ற சிறப்பினை முதன்முறையாக பெற்ற கொக்காட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவமான சிறப்புமிக்கதாக காணப்படுகின்றது.

இன்றைய கொடியேற்ற திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.