புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்




மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் வியாழக்கிழமை (09) பெரியபுல்லுமலையில் எதிர்ப்புப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

பெரிய புல்லுமலைப் பிரதேச பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்ட எதிர்ப்புப் பேரணியில் மதகுருமார், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் ச.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள், கட்சி பேதமின்றிய அரசியற் பிரமுகர்கள், இளைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும், சூழலுக்கு விரோதமாக அமைக்கப்படும் இத் தொழிற்சாலை தேவையற்றது போன்றனவாறு கோரிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.