பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் தேர்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த இரத உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் இன்று காலை இரத உற்சவம் நடைபெற்றது.

இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் உருவாக்கப்பட்டு அண்மையில் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வெளிவீதி பஞ்ச பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள்,ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது.

இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை சனிக்கிழமை காலை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.