மூடப்பட்ட பாடசாலையில் மீண்டும் கல்வி நடவடிக்கை –பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு மாதகாலமாக மூடப்பட்டிருந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள கரவெட்டியாறு விஜிதா வித்தியாத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

குறித்த பாடசாலையில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறை காரணமாக குறித்த பாடசாலை 02ஆம் மாதம் மூடப்பட்ட நிலையில் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் உன்னிச்சை பாடசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் கடந்த ஜுன் மாதம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பாடசாலையின் நிலமையினை அவதானித்து குறித்த பாடசாலையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

இதனடிப்படையில் குறித்த பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனால் இரண்டு தொண்டர் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையினை பார்வையிட்டதன் பின்னர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்குள்ள பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் அங்குள்ள வீதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கம்பிரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது இலங்கையினை சேர்ந்தவரும் இந்தியாவில் தேசிய விருதுவென்ற நடிகரும் எழுத்தாளருமான ஜெயபாலனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.