வெளி மாவட்ட மீனவர்களினால் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் பாதிப்பு

வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து கடலட்டைகளை பிடிப்போரால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளங்களும் அழிக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பெருமளவான படகுகளின் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்துவந்து கடலட்டை பிடிப்போரின் அனுமதிகளை இரத்துச்செய்யுமாறு மீன்பிடி அமைப்புகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு வருகைதந்து தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சுவிஸ்கிராமம்,நாவலடி,சீலாமுனை முகாத்துவகுழு மீனவர் அமைப்பினர் இன்று மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் றுக்ஸான் சி.குறுசை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

வெளிமாவட்டங்களுக்கு கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கியுள்ளதுடன் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களின் படகுகளை வைத்து வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கடல் தொழில் ஈடுபட்டுவருவதாகவும் இதன்போது மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள் அதன் சட்டதிட்டங்களை மீறிச்செயற்படுவதன் காரணமாக எதிர்காலத்தில் அந்த வளங்கள் இல்லாமல்போகும் நிலையேற்பட்டுள்ளதாகவும் சினைவைக்கும் கடலட்டைகள்.சிறிய வகையிலான கடலட்டைகளையும் அவர்கள் பிடித்துச்செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாரா நிறுவனத்தினால் கடல்வளங்களை பாதுகாக்கும் பொறுப்பினை மீனவர்கள் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் றுக்ஸான் சி.குறுசிடம் கேட்டபோது கடலட்டை பிடிப்பதற்கு மட்டக்களப்பில் உள்ள சில முகாமைத்துவ குழுக்கள் வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதுடன் தலைமைக்காரியாலய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெளிமாவட்ட மீனவர்களினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மீனவர்கள் வழங்கிய மகஜரை கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள தலைமைக்காரியலத்திற்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்தார்.