பௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது - யோகேஸ்வரன் எம்.பி

மட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்துக்குட்பட்ட புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் பௌத்த மதவிவகார அமைச்சின் ஆதரவுடனும் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு அனுமதி மறுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – “மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவை சேர்ந்ததாக கடந்த 1985ம் ஆண்டுக்கு முன் கிட்டத்தட்ட ஐந்து சிங்கள குடும்பங்கள் புணாணை புகையிரத நிலையத்தை அண்மித்து வாழ்ந்துள்ளனர்.

இவர்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து கடவத்தமடு என்னும் பகுதிக்கு சென்று அங்கு அரசாங்கத்தின்  மானிய வீடு, மானிய உணவுப் பொருள் உதவியை பெற்று வாழ்ந்து விட்டு தற்போது திம்புலாகலை பிக்குவின் ஆதரவுடனும், இராணுவத்தின் ஆதரவுடனும் புணாணை புகையிர நிலையத்துக்கு முன் விநாயகர் ஆலயத்தை அண்மித்து ஒரு விகாரை அமைத்து விட்டு மீள்குடியேற்றம் என்ற காரணத்தில் 25 சிங்கள குடும்பங்களுக்கு மேல் குடியேறியுள்ளனர்.

இத்திட்டமிட்ட குடியேற்றம் வனபரிபாலன திணைக்கள ஆதரவுடனும், வாகரை பிரதேச செயலகத்தின் உதவி மூலமும், மாகாண காணி பணிப்பாளரின் திட்டமிட்ட சிங்கள இன குடியேற்ற மனப்பாங்குடனும் நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இவ்வேளை மீள்குடியேற்றம் என்ற ரீதியில் அங்கு சிங்கள குடியிருப்புக்களை அமைத்ததுடன், தற்போது உயர்கல்வி அமைச்சின் ஆதரவுடனும், பௌத்த மதவிவகார அமைச்சின் ஆதரவுடனும் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க முயற்சிக்கின்றனர். இவ்விடயத்தை ஏற்க முடியாது காரணம் இது திட்டமிட்ட ஒரு சிங்கள மயமாக்கல் முயற்சியாகும்.

ஆகவே இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒன்று கூடலின் நிகழ்ச்சி நிரலில் இதையும் ஆராயும் முகமாக இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், இச்செயற்பாட்டுக்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ள கடித்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாஹம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர், வாகரை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.