தும்பங்கேணி சந்தியில் கோர விபத்து -இரண்டு வயது குழந்தை பலி-இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி-பழுகாமம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது குழந்மை உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை 9.00மணியளவில் தும்பங்கேணி-பழுகாமம் சந்தியில் டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதுண்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாச்சோலையில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு சென்ற முச்சக்கர வண்டியும் சம்மாந்துறையில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு சென்ற டிப்பர் வாகனமும் மோதிய நிலையில் முச்சக்கர வண்டி இழுத்துச்செல்லப்பட்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வயது குழந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் சிறுவனின் தாயாரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்ததாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தவர்களும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரண்டு வாகனங்களினதும் வேகமே விபத்து காரணம் என தெரிவித்த பொலிஸார் இசசம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.