காந்தி பூங்கா முன்பாக போராட்டத்தில் குதித்த உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரியும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சுயமாக ஜனநாயக பாதையில் ஈடுபட வழிவிடுமாறு கோரியும் மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிர போராட்டம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக வெள்ளையாடை அணிந்து வாயில் கறுப்பு துணிகளினால் கட்டியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஈதமிழர் விடுதலைக்கூட்டணியின் சில உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுவிக்கவேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களாக சரியான விசாரணைகள் இன்றி அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி அவர் விடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கான நல்ல அரசியல் தலைமையினை உருவாக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது ஆரம்பக்கட்ட போராட்டம் எனவும் இந்த போராட்டம் தொடர்ச்சியாக வேறு வகையில் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.