குடும்பஸ்தர் படுகொலை – மனைவியின் முதல் கணவனின் பிள்ளைகளுக்கு வலைவீச்சு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி,விடுதிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த நபரின் மனைவியின் முதலாவது கணவனின் பிள்ளைகளை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவருக்கு இரண்டாவது மனைவியானவருக்கு முன்னர் திருமணமான நிலையில் இவருடன் வசித்துவந்த நிலையில் அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் கணவரின் பிள்ளைகள் அனுராதபுரத்தில் இருந்துவந்த நிலையில் இரண்டு ஆண்பிள்ளைகள் அங்கிருந்து வந்து இவருடன் வசித்துவந்தாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

மனைவி அனுராதபுரத்தில் உள்ள தனது பெண்பிள்ளைக்கு பிரசவத்திற்காக சென்றிருந்த நிலையில் குறித்த நபரும் அவரது மூன்று பிள்ளைகளுடன் மனைவியின் மூத்த கணவரின் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்துவந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்த நபர் மதுபோதையில் பிள்ளைகளுடன் சண்டையிட்ட நிலையில் மாலை அங்கிருந்த ஐந்து பிள்ளைகளும் அனுராதபுரத்திற்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியினால் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு சென்றுபார்த்தபோது குறித்த நபர் அடிகாயங்களுடன் சடலமாக காணப்பட்ட நிலையில் அது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அங்குவந்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த பகுதி கிராம சேவையாளர் ய.சயந்தன் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் குற்றத்தடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்துடன் சடலத்திரனை பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் பணிப்புரை விடுத்தார்.

உயிரிழந்தவர் குழந்தைவேல் குருசாந்தராஜா(40வயது)என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தில் அடிகாயங்களும் வெட்டுக்காயங்களும் காணப்படுவதுடன் அருகில் இருந்து இரும்பு பொல் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவியின் முதல் கணவனின் பிள்ளைகள் இருவர் மீது சந்தேகம் நிலவுவதன் காரணமாக அனுராதபுரத்தில் உள்ள அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.