தூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களுக்காக வீதியில் இறங்கிய மட்டக்களப்பு தமிழர்கள்

இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலைசெய்தவர்களை கண்டித்தும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்,பல்வேறு கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து தூத்துக்குடியில படுகொலைசெய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதிவேண்டி ஈழத்து உறவுகளின் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதே,இந்திய அரசே படுகொலைசெய்யப்பட்ட எமது உறவுகளுக்கு நீதிவேண்டும் போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்ததுடன் படுகொலைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.