மதுபாதையில் தாயும் மகளையும் இடித்து தள்ளிய சிறைச்சாலை உத்தியோகத்தர்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஊறணியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற வானை மக்கள் மடக்கிப்பிடித்த வேளையில் அங்கு பதற்ற நிலையேற்பட்டது.குறித்த வான் சாரதி சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையாற்றுவதாகவும் குறித்த நேரம் மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

தனியார் வகுப்புக்கு மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த தாயும் மகளையும் வான் ஒன்று மோதி தள்ளியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த தாயும் மகளும் அங்கிருந்தவர்களினால் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விபத்தினை ஏற்படுத்திய வான் குறித்த பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில் அப்பகுதி மக்களினால் குறித்த வான் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரத்திற்கு பின்னர் வந்தே சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.