நாவற்குடாவில் தோணி எரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மீனவர் ஒருவரின் மீன்பிடி வள்ளம் இனந்தெரியாதவர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

நாவற்குடா கங்காணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு பின்புறமான மட்டக்களப்பு வாவிப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவரின் மீன்பிடி வள்ளமே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த வள்ளம் எரிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் பிரிவினரும் ஸ்தலத்திற்கு சென்று இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.