புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன-இருவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட nபுருமளவான மதுபான போத்தல்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இன்றும் நாளையும் மதுபான விற்பனைகள் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக விற்பனைசெய்யும் வகையில் இந்த மதுபான போத்தல்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

அரசாங்கம் மதுபானசாலைகளை இரு தினங்கள் மூடுமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில் சட்ட விரோத மதுபான விற்பனைகளை தடுக்கும் வகையில்  மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தி.ஹகவத்துற தலைமையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் புன்னைச்சோலையில் விசேட நடவடிக்கைகயில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முச்சக்கரவண்டியில் பெட்டிகளில் மறைக்கப்பட்ட நிலையில் மிகவும் இரகசியமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட இந்த மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது முழு மதுபான போத்தல்கள் 13 மற்றும் அரை போத்தல்கள் 48 ம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தி.ஹகவத்துற தெரிவித்தார்.

இது தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.