மாங்காட்டில் நடந்த விபரீதம் -இளைஞனின் உயிரை பலிகொண்ட டிப்பர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வானும் மோதிய இந்த விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வான் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் வானில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் டிப்பரின் சாரதி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் மூவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பொலநறுவையில் இருந்து கோழி ஏற்றிக்கொண்டு வேகமாக கல்முனை நோக்கிவந்த டிப்பர் வாகனம் ஓந்தாச்சிமடத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் மீது மோதியுள்ளது.

இதன்போது டிப்பரில் மோதுண்ட வான் மின்கம்பதிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஓந்தாச்சிமடம் 36வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த இராஜரெட்னம் தினேஸ்காந்த் என்ற 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.