வாகரையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது

மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி பிரதேசசபை அதிகாரத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவுசெய்யும் அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ந.கோணலிங்கமும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் க.கணேஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டதுடன் திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோணலிங்கம் 10வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கணேஸ் 08வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில் இரண்டு வாக்குகளினால் வெற்றிபெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நமசிவாயம் கோணலிங்கம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று உறுப்பினர்களில் இருவர் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் உறுப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கும் ஆதரவு வழங்கினர்.

பிரதி தவிசாளர் தெரிவின்போது தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆகியவற்றினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சினை சேர்ந்த முகமட் தாகீரின் பெயர் முன்மொழியப்பட்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களினால் எம்.சந்திரபாலவின் பெயர் முன்மொழியப்பட்டது.

இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களினால் எம்.சந்திரபால 10 வாக்குகளைப்பெற்று பிரதி தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டதுடன் முகமட் தாகிர் 08 வாக்குகளைப்பெற்றார்.