தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட வாகரை பிரதேசசபை தவிசாளர்

மட்டக்களப்பு,கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் வாகரை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வாகரை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த நிலையிலேயே இன்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வாகரை பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று இன்று வாகரை பிரதேசபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட ந.கோணலிங்கமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு தினங்களுக்கு முன்னர் குறித்த பிரதேச கிராம சேவையாளர் கைதுசெய்யப்பட்ட நிலையில் தவிசாளரும் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீடு ஒன்றில் வேறு இனத்தை சேர்ந்த நபர் ஒருவர் இருந்துள்ளது தொடர்பிலான தகவல்கள் கிடைத்த நிலையில் அந்த வீட்டினை இளைஞர்கள் சுற்றிவளைத்து குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலேயே தவிசாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.