தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் தீர்த்தோற்சவம் -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்கதும் மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் சித்திரா பௌர்ணமியில் ஆயிரகக்ணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சித்தர்களினால் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் நீண்ட வரலாற்று ஆலயமாகவும் மட்;டக்களப்பு மாவட்டத்தில் பேராலயமாகவும் மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் கருதப்படுகின்றது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் மஹோற்சவத்தில் தினமும் மாலை விசேட யாகாரம்பம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜை,சுவாமி உள்வீதி வெளி வீதி வருதல் ஆகியன நடைபெற்றுவந்தன.

கடந்த வியாழக்கிழமை காலை மாம்பழத்திருவிழாவும்,27.04.2018 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழாவும் நடைபெற்றதுடன் சனிக்கிழமை மாலை சப்பரத்திருவிழாவும் விழாவும் நடைபெற்றது.

சுpவாகம ஜோதி சிவஸ்ரீ க.கு.சீதாராம குருக்கள் தலமையில் நடைபெற்ற மஹோற்சவத்தின் தீர்த்தோற்சதவத்தினை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் தீர்த்தோற்சவ கிரியைகள் ஆரம்பமானது.

இதன்போது தம்பபூஜை,திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்று வசந்த மண்டப பூஜையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள ஆலயத்தின் பாலாறு பாலபுஸ்கரணி தீர்த்தக்கேணியருகில் சுவாமி வீதியுலா வந்ததுடன் அங்கு விசேட அபிசேக பூஜைகள் நடைபெற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தீர்த்த உற்சவகத்தின்போது சித்திரா பௌர்ணமி தினத்தில் உயிர் நீத்த தாய்மாரின் ஆத்மசாந்திக்காக பிதிர்க்கடன் தீர்க்கும் வகையிலும் அடியார்களுக்கான தெற்பைகள் அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் சித்திரா பௌர்ணமியை குறிக்கும் வகையில் சித்திரகுப்தனார் கதை பாடப்பட்டதுடன் சித்திரைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.