பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல் -முன்னுக்கு பின்னான பிரதிப்மாஸ்டரின் வாக்கு மூலம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேர் மீதான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்றும் இன்று வியாழக்கிழiயும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்றது.

நேற்றைய தினம் சந்தேக நபரான கஜன் மாமா மீதான விசாரணைகள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதிமாஸ்டர் மீதான விசாரணைகள் நடைபெற்றன.

இதன்போது பிரதிப்மாஸ்டரின் சாட்சியத்தில் முன்னுக்கு பின்னான முரணான சாட்சியங்கள் தெரிவிக்கப்பட்டதன் காரணமாக அவர் மீதான இரண்டாம் கட்ட விசாரணைக்காக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஆறு பேரையும்  ஜுன் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் உத்தரவிட்டார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொகுப்பினை இந்த மாத இறுதியில் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு மரியால் பேராலயத்தில் 2005ஆம்ஆண்டு டிசம்பவர் 25ஆம்திகதி நத்தார் ஆராதனையின்போது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் 2015ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதிப்மாஸ்டர் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அது தொடர்பான விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றன.

இதன் கீழ் ஐந்தாம் கட்ட விசாரணைகள் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இஸ்ஸடின் முன்னிலையில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.