கல்வி பணிப்பாளருக்கு எதிராக காந்திபூங்கா வந்த ஆசிரியர் –யோகேஸ்வரன் எம்.பி.யின் உறுதிமொழியால் வீடு சென்றார்

மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் மேற்கொண்டுவந்த உண்ணாவிரத போராட்டம் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வழங்கிய உறுதிமொழியையடுத்து நிறைவுக்குவந்தது.

விபத்தினால் படுகாயமடைந்து நடப்பதற்கு முடியாத நிலையில் உள்ள தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறியே இன்று காலை முதல் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் க.கிருபாகரன் என்னும் ஆசிரியர் ஈடுபட்டுவருகின்றார்.

கல்லடியை சேர்ந்த குறித்த ஆசிரியர் கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பத்து வருடமாக ஆசிரியராக கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டுவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு விபத்துக்குள்ளாகி 10 மாதங்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்ததாகவும் அதன் பின்னர் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளரிடம் தனக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்தார்.

அதற்கு வலய கல்விப்பணிப்பாளர் நிரந்தர இடமாற்றம் வழங்கமுடியாது என தெரிவித்திருந்ததாகவும் தற்காலிகமாக இடமாற்றம் வழங்குவதாக தெரிவித்து கல்லடிக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

சுமார் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் 28-02-2018 தனது தற்காலிக இடமாற்றம் நிறைவுபெற்ற நிலையில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரிடம் தனக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரியபோது இடமாற்றம் வழங்கமுடியாது என தெரிவித்தாகவும் ஆசிரியர் கிருபாகரன் தெரிவித்தார்.

தனக்கு இடமாற்றம் வழங்கமுடியாது ஏளனமாகவும் அலட்சியப்போக்கிலும் வலய கல்விப்பணிப்பாளர் தன்னிடம் நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னை ஆளுனரிடம் செல்லுமாறு வலய கல்விப்பணிப்பாளர் கூறியதாகவும் அங்கு சென்று தான் தனது நிலமையினை ஆளுனரிடம் தெரிவித்தபோது அது தொடர்பில் ஆளுனர் கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் வலய கல்விப்பணிப்பாளிரின் கடிதம் ஒன்றை பெற்றுவருமாறு கூறியதாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்தார்.

அதற்கிணங்க தனது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்கான இடமாற்றத்தினை பெற்றுத்தரும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தப்பபோவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரனிடம் கேட்டபோது கல்வி அமைச்சின் செயலாளர் அவர்கள் 28-03-2018அன்று தொடக்கம் எந்தவித இடமாற்றங்களையும் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியதன் காரணமாகவே அவருக்கு இடமாற்றம் வழங்கமுடியாமல்போனதாக தெரிவித்தார்.

அத்துடன் அவருக்கு இடமாற்றம் தேவையென்றால் அது தொடர்பாக எழுத்து மூலமாக தனக்கு அறிவிக்கப்படும்போது அது தொடர்பில் கல்வி அமைச்சின் அனுமதியை பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தான் எந்தவிதமான அலட்சியப்போக்குடனோ அல்லது அவரை ஏளனப்படுத்தும் வகையிலேயோ எந்தவித கருத்தினையும் தெரிவிக்கவி;ல்லையெனவும் கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய எந்தவித இடமாற்றங்களையும் தன்னால் செய்யமுடியாது என்பதையே தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் போலியான வகையில் குறித்த ஆசிரியர் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுவருவதாகவும் வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேநேரம் இன்று பிற்பகல் 3.00மணியளவில் போராட்ட இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறித்த இடமாற்றம் தேவையான நடவடிக்கையினை எடுப்பதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.