வரலாற்றில் முதல்தடவையாக கட்சியொன்றின் அமைப்பாளரினால் நடாத்தப்பட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக கட்சியொன்றின் அமைப்பாளரினால் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சரும் நுகர்வோர் அதிகாரசபையின் சிரேஸ்ட ஆலோசகரும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சரும் நுகர்வோர் அதிகாரசபையின் சிரேஸ்ட ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தியும் உள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகளான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் இன்றைய கூட்டத்திற்கு சமூகமளிக்காத நிலையில் இணைத்தலைவரும் அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தியே கூட்டத்தினை நடாத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு முன் ஆசனம் வழங்கப்படாத நிலையில் வழமையாக மாகாணசபை உறுப்பினர்கள் அமரும் பகுதியில் இடம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக அபிவிருத்திக்குழுக்கூட்டம் கட்சியொன்றின் அமைப்பாளரினால் நடாத்தப்பட்டிருந்தது.