அட்டப்பள்ளம் விவகாரம் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் -வியாழேந்திரன் எம்.பி.

அம்பாறை மாவட்டத்தில் சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இனவாத கண்ணோட்டத்துடன் செயற்பட்டுவருவதை வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

அட்டப்பள்ளம் பகுதியில் இந்து மயானக்காணி அபகரிக்கப்பட்டுள்ளமை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டப்பள்ளம் ஆலய தலைவர் உட்பட 21பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பார்வையிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து சிறைச்சாலைக்கு முன்பாக ஊடகவியலாளர்களை சந்தித்து தனது கருத்துகளை பதிவுசெய்தார்.இதன்போது தொடர்ந்த கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பூர்வீக குடியிருப்பு காணிகள்,வாழ்வாதார காணிகள்,மயானக்காணிகள்,மைதானக்காணிகள் அபரிக்கப்படுகின்ற, சூறையாடப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இவ்வாறான தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலில் அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் என்னும் தமிழர்களின் பூர்வீக கிராமத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்விகமான மயானக்காணி அபகரிக்கப்பட்டுள்ளது.

அட்டப்பள்ளத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்துவருகின்றன.இது தமிழ் மக்களை உள்ளடக்கிய பூர்வீக கிராமமாகும்.பரம்பரைபரம்பரையாக மயானபூமியாக பயன்படுத்திவந்த 14ஏக்கர் காணியை 2017ஆம் ஆண்டு சகோதர இனத்தை சேர்ந்த ஒருவர் அதற்குரிய ஆவனத்தை கொண்டுவந்து வேலியடைத்துள்ளார்.அந்தவேளையில் 12ஏக்கர் காணியை தமிழ் மக்கள் விட்டுக்கொடுத்துள்ளனர்.

இரண்டு ஏக்கர் காணியை விட்டு ஏனையவற்றை அடைத்துள்ளார்.அந்த காணியிலேயே தமது இறந்த உறவுகளின் உடல்களை அடக்கம் செய்துவந்துள்ளனர்.ஆனால் இன்று அதேநபர் மீண்டும் மிகுதியாகவுள்ள இரண்டு ஏக்கருக்கும் வேலியை அமைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

தமது உறவுகள் அடக்கம்செய்யப்பட்ட கல்லறைகளையும் உள்ளடக்கியதாகவும் கல்லறைக்கு மேலாகவும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை அவர்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பரம்பரையாக மயானபூமியாக பயன்படுத்தப்பட்டுவந்த பகுதியானது பொறுப்புவாய்ந்த ஒரு சில அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினாலும் ஒத்துழைப்புடனும் ஒரு சில அரசியல் பின்புலத்துடன் அபரிக்கப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட இவ்வாறான பிரச்சினைகளுக்கு நாங்கள் முகம்கொடுத்துவருகின்றோம்.தளவாயில் பிரித்தானிய காலத்தில் வழங்கப்பட்ட பாடசாலை மைதானக்காணி கூட இரவோடு இரவாக வேலியடைக்கப்பட்டபோது நான் அங்கு சென்று அதனை தடுத்து நிறுத்தி அந்த மைதானக்காணியை பெற்றுக்கொடுத்;தேன்.

ஆரம்பகாலத்திலிருந்துவரும் மயானக்காணிகள் நில அளவை செய்யப்படாத காரணத்தினால் சில இடங்களில் பிரதேசசபைகளில் பதிவுசெய்யப்படாத நிலையிருக்கின்றது.அதனை சாதகமாக வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் ஒரு சில அதிகாரிகள் தங்களது தேவைகளைப்பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை பட்டாபோட்டுக்கொடுக்கும் கேவலமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது.

அந்தவகையில் அட்டப்பள்ளத்தில் தமது மயானக்காணியை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மக்களை சம்மாந்துறை பொலிஸார் பொலிஸ் நிலையம் வாருங்கள் உங்களை சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுடன் சமாதானப்படுத்தப்போகின்றோம் என்று கூறி அழைத்துள்ளனர்.

அங்கு 21 ஆண்களும் இரண்டு பெண்களும் சென்றவேளையில் அவர்களை அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நான்கு மணி வரையில் வைத்திருந்து பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளார்.அதன் பின்னர் அவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.ஆலய தலைவர் உட்பட 21பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் சட்டத்தினை மதிக்கின்றோம்.ஆனால் பரம்பரையாக பயன்படுத்தப்பட்டுவந்த மயானக்காணியை அபகரிக்கமுற்பட்டவர்களை சரியான முறையில் விசாரணைசெய்து அதற்குரிய நடவடிக்கையினை எடுக்காமல் இனவாத கண்ணோட்டதுடனும் இனவாத சிந்தனையுடனும் செயற்பட்டுள்ள அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழ் மக்களின் காணிக்களை அவர்கள் முன்பாகவே அபகரிப்பதானது வேதனையான விடயமாகும்.நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் அட்டப்பள்ளம் பிரதேச மக்களின் மயானக்காணி அபகரிக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வேன்.அதேபோன்று விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளவர்களை வெளியில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.