பார்ப்போரை கவர்ந்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் கண்காட்சி

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெடிஸ்த மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கண்காட்சி நேற்று புதன்கிழமை (07-03)காலை வெகுவிமர்சiயாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் ஜே.ஆர்.பி.விமல்ராஜ் தலைமையில் ஆரம்பமான இந்த கண்காட்சியில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.அருள்பிரகாசம்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் வை.கோபிநாத்,பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவர் எஸ்.சசிகரன்,பாடசாலையின் உபஅதிபர் ஆர்.பாஸ்கரன் உட்பட கல்வி வலய அதிகாரிகள் பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் ஆக்கத்திறனை அதிகரிப்பதற்கும் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளுக்கான களத்தினை ஏற்படுத்துவதற்கும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அவர்களின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கண்காட்சி நடாத்தப்பட்டது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களது கைவண்ணத்தில் உருவான பொருட்களை இங்கு காட்சிப்படுத்தியிருந்ததுடன் இதனை கண்டு மகிழ்வதற்கு மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் வருகைதந்தமையும் குறிப்பிடத்தக்கது.