மட்டக்களப்பு வரலாற்றில் நடைபெற்ற அதிசய நடன விழா

மட்டக்களப்பு கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு “சதங்கை நாதாம்ருதம்” என்னும் நாட்டிய நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு,நாவற்குடாவில் உள்ள சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் கலார்ப்பணா நாட்டிய நிலையத்தின் இயக்குனரும் நடன ஆசிரியருமான கலாவித்தகர்,நடனக்கலைமாமணி திருமதி சசிகலாராணி ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,கல்குடா வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாபூசணம் திருமதி கமலா ஞானதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான மாணவர்கள் பங்குகொண்ட நாட்டிய நிகழ்வாக இந்த “சதங்கை நாதாம்ருதம்”நிகழ்வு விளங்கியது.

கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தில் நாட்டியதுறையில் பயிலும் பல்வேறு வயதினையும் சேர்ந்த 165 மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் நடைபெற்ற நடன நிகழ்வுகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தமை இறுதிவரை அரங்கு நிரம்பிய மக்கள் வெள்ளம் வெளிபபடுத்தியிருந்தது.

இதன்போது நாட்டிய துறையில் அர்ப்பணிப்பான சேவையினையாற்றிவருவவோரும் கலைத்துறையில்சேவையாற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நாட்டியத்துறை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் விசேடமாக கல்லடி உட்பட மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளி மாணவர்களின் கலை ஆர்வத்தினை தீர்க்கும் வகையில் நடனத்துறையின் மூலம் கலார்ப்பணா நாட்டிய நிலையம் அமைத்து சேவையாற்றிவரும் அதன் இயக்குனர் திருமதி சசிகலாராணி ஜெயராம் பெற்றோர்,மாணவர்கள்,நலன் விரும்பிகள்,பழைய மாணவர்களினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.