காத்தான்குடியில் அமைச்சர் ரிசாத் கூட்டத்தில் பதற்றம் -அதிரடி முடிவெடுத்த உதவி தேர்தல் ஆணையாளர்

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் அனுமதிக்கப்பட்ட நேரத்தினையும் தாண்டிச்சென்றதாக கிடைக்கப்பெற்ற முறைபாடுகளின் அடிப்படையில் அங்குவந்த தேர்தல் அதிகாரிகளினால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மட்டக்களப்பு,காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கான பரப்புரை கூட்டமும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை வேட்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ரி.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதின் மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி நகரசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் தேர்தல் பரப்புரைகளும் நடைபெற்றன.

தலைமை வேட்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ரி.எல்.ஜவ்பர்கான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதின் மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி ஆகியோர் இதன்போது உரையாற்றினர்.

இந்த நிலையில் குறித்த நிகழ்வில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக கூட்டம் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த தேர்தல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் சுசீலன் கூட்டத்தினை இடை நிறுத்துமாறு பணித்ததை தொடர்ந்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

கூட்டம் நடாத்துவதற்கான நேரத்தினையும் தாண்டி கூட்டம் நடைபெற்றுவதாக உதவி தேர்தல் ஆணையாளருக்குகிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அங்கு வந்து இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

இதன்காரணமாக அங்கு உரையாற்றிக்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதின் தனது உரையினை இடைநடுவில் நிறுத்திவிட்டுச்சென்றார்.